அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை கடந்த வாரம் அறிவித்திருந்த போதும் நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நெல்லுக்கான உத்தரவாத விலையாக, நாட்டு நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 132 ரூபாய்க் கும் கொள்முதல் செய்யப்படும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்திருந்தது.
எனினும், பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்பட்ட போதும், நிதி பற்றாக்குறையின் காரணமாக இதுவரை நெல் கொள்வனவு இடம்பெறவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம், கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபை அறிவித்துள்ளது.
அதன்படி, சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 7,657 ஏக்கர் நிலத்திற்கான 8,705 விவசாயிகளின் கணக்குகளில் 122 மில்லியன் ரூபாய் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் 6,239 விவசாயிகளுக்கு 9,067 ஏக்கருக்கு 114 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் கணக்குகளில் பயிர் சேத நிதியை வரவு வைக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதன்படி, சேதமடைந்த 4,324 ஏக்கர் பயிர்களுக்கு 3,272 விவசாயிகளின் கணக்குகளில் 70 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.