செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”’ஏஐ வளர்ச்சியால் மனித வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான் இந்த தொழில்நுட்பத்துக்கான மிகப் பெரிய இடையூறாக இருக்கிறது எனவும், நாம் ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மக்களின் திறன்களை மேம்படுத்துவதிலும், அவற்றை மாற்றியமைப்பதிலும் கவனம் செலுத்தினால் ஏஐ சார்ந்த எதிர்காலத்தை எளிதில் எதிர்கொள்ளலாம் எனவும் இதற்கு, நாம் வெளிப்படத்தன்மை நிறைந்த திறந்த மூல மென்பொருள்களை (ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர்கள்) உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொழில்நுட்ப பயன்பாட்டில் ஜனநாயகத்தை புகுத்த வேண்டும் எனவும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட செயலிகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக, சைபர் பாதுகாப்பு, டீப் ஃபேக் கட்டுப்பாடு, திரிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பான பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், ஏஐ எதிர்காலம் நன்மைக்கானதாகவும் அனைவருக்குமானதாகவும், இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறதுஎனவும் பிரதமர் மோடி ஏஐ தற்போது மிக வேகமாக, எதிர்பாராத வீரியத்துடன் வளர்ந்து வருகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் உலக நாடுகளின் ஏஐ மீதான சார்பு எல்லைகள் கடந்து ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதாகவும் அதனால் ஏஐ தொழில்நுட்பத்தை நிர்வகிக்க சர்வதேச கூட்டு முயற்சி தேவை எனவும் நாம் பகிர்ந்து கொண்டுள்ள மதிப்பீடுகள், நாம் சந்திக்கும் அபாயங்கள், நாம் கட்டமைக்கும் நம்பிக்கைகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக ஏஐ தொழில்நுட்ப மேலாண்மை விதிகள் இருக்க வேண்டும்’ எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.