கடந்த கால ஆட்சியாளர்களின், தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பான கருத்தாடல் நிகழ்வொன்று, இன்று கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ” கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருட சலுகைக் காலத்தை தாம் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் 2028 ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம்
கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது எனவும்,
வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல உலகநாடுகளுக்கு ஒரு தசாப்தம் வரை சென்றாலும்,
இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலமே செல்லும் என்று கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
15.1 சதவீதமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் நிதியை செலவிடுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும், பொருளாதாரத்தை விஸ்தரித்து பொருளாதாரத்தை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலமும், குடிமக்களைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் கைத்தொழில்துறைக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம்
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் எனவும், கிராமப்புற வறுமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, கல்வித்துறைக்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் பாடசாலைக் கட்டமைப்பில் மனித மற்றும் பௌதீக வளங்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச செலவின முகாமைத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், அரச சேவைக்காக அதிக செலவு மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும், எனவே, அரச நிறுவனங்களின் செலவினங்களை மறுபரிசீலனை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது எனவும், அரசியல் அதிகாரத்தை
ஊழல் இல்லாத இடமாக தாம் மாற்றியுள்ளதாகவும், எனவே இலஞ்சம் கொடுக்காத கலாச்சாரத்தை உருவாக்குவது குடிமக்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.