இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த மீனவர்கள் உள்ளிட்ட இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் விடுதலை வலியுறுத்தி, தமிழ் நாடு, ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.
இதன்போது, இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து நேற்று இரண்டாவது நாளாகவும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.