கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில், கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் எனவும், அவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது” வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் இறந்தவர் அப்பகுதியில் வசித்த நபர் ஒருவரையும் அவரது மனைவியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்னர் இறந்தவரின் கையில் இருந்த கூரிய ஆயுதத்தைப் பறித்த குறித்த நபர் அதே ஆயுதத்தால் இறந்தவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இச் சம்பவத்தில் சந்தேகநபரும் அவரது மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.