அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது.
பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது.
செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15) முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோக் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாகவும் சபதம் செய்தனர்.
சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவில் சனிக்கிழமை இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்றாகும்.
ஞாயிற்றுக்கிழமை ஈரானும் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்து ஹவுத்திகளுக்கு உதவ மறுத்தது.
ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஹவுத்திகளின் தாக்குதல்களில் தனது நாடு ஈடுபடவில்லை என்று மறுத்தார்.
மேலும் பிராந்தியம் முழுவதும் அது கூட்டணி வைத்திருக்கும் போராளிக் குழுக்களின் “தேசிய அல்லது செயல்பாட்டுக் கொள்கைகளை அமைப்பதில் அது எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் ட்ரம்ப் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் படங்களையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.