இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 8 (04.01.2025)
இராமேஸ்வரத்திலிருந்து மதுரையை நோக்கிப் புறப்பட்ட ‘வேர்களைத்தேடி …‘ பண்பாட்டுப் பயணத்தை முழுமையாக இரசிக்க இயலாதபடி எனது உடல் நலம் குன்றியிருந்தது. நோயுற்றிருந்த என்னையும் சகோதரி சைஹானாவையும் சுமந்து வந்த கார் மதுரையில் நாம் தங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஹோட்டலை அடைந்தபோது இரவாகியிருந்தது.
பொதுவாக இப் பயணத்தின்போது எமக்கு வழங்கப்பட்ட அத்தனை உணவுகளையும் இரசித்துச் சுவைத்த நான் இப்போது உணவு உண்பதில் விருப்பின்றி இருந்தேன். அதனால் இரவு உணவு உண்பதைத் தவிர்த்து படுக்கைக்குச் சென்றுவிட்டேன்.
காலையில் உடல்நிலை ஓரளவு தேறியிருந்தது. அதனால் பேரார்வத்துடன் மதுரை மீனாட்சியம்மனைத் தரிசிக்கத் தயாரானேன்.
கிடைத்த குறுகிய நேர அவகாசத்தினுள் இணையத்தில் மதுரை பற்றிய சிறு தேடல் ஒன்றை நிகழ்த்தினேன். அத்தேடல் அன்றைய பயண அனுபவங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
மதுரை மாநகரம்
தமிழ்நாட்டிலுள்ள புராதன நகரங்களில் மதுரை சிறப்பிடம் பெறுகிறது . ‘தூங்கா நகரம்‘ என்று சிறப்பித்துக் கூறப்படும் ஒரு நகரம் இதுவாகும்.. தூங்கா நகரம் என்பது இரவு பகல் வேறுபாடின்றி எந்த நேரமும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நகர் என்ற பொருளில் அமையும்.
மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் அரண்மனை ஆகியவற்றுடன் இந்த நகரத்தில் பல வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. மதுரை தென் தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் மற்றும் கல்வி
மையமாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
இது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்ததுள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.
இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. திருஞான சம்பந்தர் , திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மார்களால் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலமாகும். திராவிட கட்டடக் கலை மரபினைப் பின்பற்றி அமைக்கப்பட்ட ஆலயமாகவும் திகழ்கிறது.
இவ்வாலயத்தின் கோபுரங்கள் மதுரை மாநகருக்கு அடையாளமாகவும் , அழகு சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. மதுரை நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானை வணங்கும் அடியார்களின் முத்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலம் முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல் அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இங்கு தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றதாகும்.
கோயிலின் அமைப்பு
இவ்வாலயம் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது எட்டுக் கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள் இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும் வடக்குத்
தெற்காக 792 அடியும் உடையது.
இக்கோவிலின் சுற்று வீதிகளில் , நான்கு புறமும் ஒன்பது நிலைகளையுடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுள் கிழக்கு இராச கோபுரம் பிற்கால பாண்டியர்களாலும் மேற்குக் கோபுரம் மாறவர்மன் குலசேகர பாண்டியனாலும் தெற்குக் கோபுரம் மன்னர் விசுவநாத நாயக்கராலும் வடக்குக் கோபுரம் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால்
கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம்
குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது. இக்கோயிலில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கலையழகு மிக்க மண்டபங்கள் பல காணப்படுகின்றன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஒவ்வொரு மண்டபமும் , அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் ,
தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன.
ஆயிரங்கால் மண்டபம்
இது ஆலயத்தின் சுவாமி சன்னதியின் இடது புறத்தில் அமைந்துள்ளது. இம்மண்டபம் ஏனைய மண்டபங்களைவிட அளவில் பெரியது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களை எக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருப்பதைப்போல் தோற்றமளிக்கும் காட்சி வியப்பானது.
தூண்கள்
ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு 73 * 76 சதுரமீட்டர் கூரையைத் தாங்கும் வண்ணம்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் இன்னிசை ஒலி எழுப்பும் 2 தூண்கள் அமைந்துள்ளன. தற்போது
இம்மண்டபம் கோயில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பல்வேறு காலத்தைய சிற்பங்கள் ,
ஓவியங்கள் , பரதக்கலை முத்திரைகள் , தியான சித்திரங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களாகக்
காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் சுற்று வீதிகளுக்கு ஆடி வீதிகள் என்று பெயர். கோயிலுக்கு வெளியில் முதல் சுற்று சித்திரை வீதிகள் என்றும் சித்திரை வீதிகளுக்கு அடுத்த வெளி சுற்று ஆவணி வீதிகள் என்றும் அதற்கு அடுத்த வெளிச்சுற்று மாசி வீதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வாலயத்தில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் இடம்பெற்று வருவது குறிப்பிட்டுக் கூறக்கூடயதொன்றாகும்.
…………………………………………
இணையவழித் தேடலை அவசர அவசரமாக முடித்துக் கொண்டபோது ஆலயத்துக்கு எம்மை
அழைத்துச் செல்ல இரு சிறிய பஸ் வண்டிகள் தயாராகக் காத்திருந்தன. ஆலயம் உள்ள பிரதேசம்
சன நெரிசல் அதிகமாக உள்ள பகுதி என்றும், அப்பகுதியில் நாம் பயணித்த பெரிய பஸ்ஸைக்
கொண்டு செல்ல முடியாது என்றும் இணைப்பாளர்கள் விளக்கமளித்ததைத் தொடர்ந்து ஆண்கள்
வேறாகவும் பெண்கள் வேறாகவும் இரு பிரிவாகப் பிரிந்து இரு பஸ்களிலும் ஏறிக்கொண்டோம்.
எனினும் எமது பயணப் பொதிகள் எமது பயணத்துக்கென்று ஒதுக்கப்பட்ட விசேட பஸ்
வண்டியிலேயே ஏற்றப்பட்டன. ஆலய தரிசனத்தை முடித்ததும் மீண்டும் பஸ் மாறிப் பயணிக்க
வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஆலயத்தை நோக்கிய எமது பயணத்தின்போது மதுரை நகர வீதிகளில் எனது கவனம் பதிந்தது.
தெருவில் தென்பட்ட மனிதர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதைப்
போன்று தோன்றியது. சிலவேளை அது எனது மனப் பிரமையாகவும்கூட இருந்திருக்கலாம்.
மதுரையைப் பற்றி சிறு வயதில் கற்ற விடயங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.
பண்டைய தமிழகத்தில் மூவேந்தர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வரலாறு நினைவுக்கு
வந்தபோது மதுரையில் நிற்பதே பெருமையாகத் தோன்றியது.
சைவ சமய பாடத்தில் கற்ற ‘சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட’ கதையின்
நிகழ்விடமும் இதுதான் என்ற எண்ணம் மனதிலே தோன்றி இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஒரு புண்ணிய பூமிக்கு வந்திருக்கிறோம் என்ற பூரிப்போடு ஆலய தரிசனம் காணச் சென்றோம்.
ஆலயத்துக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்ற தகவலை ஏற்கனவே
இணைப்பாளர்கள் எமக்கு வழங்கியிருந்ததால் அவற்றை பஸ்ஸிலேயே விட்டுவிட்டு
வந்திருந்தோம்.
இறைதரிசனம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு ஆலயத்துள் பிரவேசித்தோம். வாசலில் வைத்து
பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் சிறு பரிசோதனை ஒன்றை நாம் சந்திக்க
வேண்டியிருந்தது. கைத்தொலைபேசிகளை நாம் எடுத்துச் செல்லவில்லை என்பது
உறுதிப்படுத்தப் பட்டதும் உள் நுழைய அனுமதிக்கப் பட்டோம்.
எம்மோடு பயணத்தில் இணைந்திருந்த தமிழக சுற்றுலாத்துறை உத்தியோகத்தர் திருவாளர்
கணேஸ் அவர்கள் எமது இணையவழித் தேடலுக்கு மேலதிகமாக ஆலயம் தொடர்பாகப் பல
பயனுள்ள தகவல்களை வழங்கினார்.
ஆலயத்தின் ஒரு பகுதியில் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்ட இடம்
ஒதுக்கியிருப்பதைக் கண்ணுற்றபோது தமிழகத்தின் பண்பாட்டினை எண்ணி வியப்பு ஏற்பட்டது.
முன் மாதிரியான இச்செயலை ஏனைய ஆலயங்களிலும் பின்பற்றினால் என்ன? என்ற எண்ணம்
என் சிந்தனையில் தோன்றியது.
கூப்பிய கரங்களுடன் ஆலயத்தைச் சுற்றி வந்தோம். ஆலய வளாகத்துள் பக்தர்கள் கூட்டம்
நிறைந்திருந்தது. அதனால் தாமதத்திற்கு இடமின்றி அவசர அவசரமாக எமது பிரார்த்தனைகளை
முடித்து, ஆலயத்தின் கலைப்பொக்கிசங்களைக் கண்ணாரக் கண்டு களித்து, பொற்றாமரைக்
குளத்தருகே வந்து படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டோம்.

அவ்வேளை ஆலயத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் எமக்கு பிரசாதம் வழங்கினர். எம்மோடு இணைந்து பயணித்த புகைப்படப் பிடிப்பாளர்கள் எம்மைப் புகைப்படம் பிடித்தனர்.
ஆலயதரிசனம் முடிந்ததும் மதிய போசனத்துக்காக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச்
செல்லப்பட்டோம். அங்கு மதிய போசனம் உட்கொண்டு முடித்ததும் தொல்பொருள் ஆய்வு
இடம்பெறும் கீழடி நோக்கி எமது பயணம் தொடங்கியது.
( செல்வதற்கு முன்னர் அது பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இணையத்தில்
தேடலைத் தொடங்கினேன்.)
கீழடி அகழ்வாராய்ச்சி
வைகை நதியின் தென் கரையில் , மதுரையிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில், சிவகங்கை
மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடி
கிராமம் அமைந்துள்ளது.
தற்போதைய கீழடி அகழ்வாய்வுத் தளமானது முதலில் தென்னந்தோப்பாக இருந்தது. பின்னர்
வறட்சி காரணமாக அம்மரங்கள் கருகிப் போனதைத் தொடர்ந்து. அவ்விடத்தில் செங்கல்
சூளைக்கு மண் எடுப்பதற்காகத் தோண்டியபோது ஒரு செங்கல் சுவர் தென்பட்டுள்ளது. இந்த
நிகழ்வுக்குப் பிறகு அந்த இடத்தில் அகழாய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிந்து, கங்கை, நதிக்கரை நாகரீகத்துக்குப் பின் தோன்றிய இரண்டாம் நிலை நாகரீகமாக சுமார்
2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைக்கரை நாகரீகம் சிறந்து விளங்கியமைக்கான சான்றுகள்
கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழ்வாய்வாகும்.
இங்கு 40 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால
மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. உறை கிணறுகள், செங்கற்சுவர்கள்,
கூரை ஓடுகள் , மண்பாண்டங்கள் , மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள் ,இரும்புவேல்,
தமிழ்ப்பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள்
அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான பெருமணலூர்
இதுவாக
இருக்கலாம் என்று கருதப்படுகிறது.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள்
அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும் சங்கத்தமிழ்
ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் 10க்கும் மேற்பட்ட செங்கல் கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வரலாற்றுத் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் காணப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை மாற்றியமைத்துள்ளது.
மேலும் சுடுமண் குழாய் , கழிவுநீர்த் தொகுதிகள் கிடைத்துள்ளன. நீர் வழங்கலும் , கழிவு நீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்களாகக் கருதப்படுவன. கீழடியில் சுடுமண் குளாய்மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை
கூறும் உறைகிணற்றுப் புறச்சேரி என்ற தொடருக்குச் சான்று பகர்வனவாகவும் ,
ஆற்றங்கரைகளிலும் பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து
நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக் காட்டுவனவாகவும் உள்ளதாக
தொல்லியல் அறிஞர் வெ. வேதாச்சலம் குறிப்பிடுகின்றார்.
வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம்
மாவட்டம்வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013 – 2014 இல் நடத்தப்பட்ட
தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள்
கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள் , வணிகத் தலங்கள், துறைமுகங்கள் , வாழிடங்கள் ,
கோயில்கள் என்ற வகையிலானவை.
இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது. இந்த
அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்துக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
…………………………..
கீழடியிலுள்ள அகழாய்வு மையத்துக்குச் சென்றபோது இதுவரை பார்த்திராத ஒன்றைக் காணச்
செல்கின்ற உல்லாசப் பயணியின் மனநிலையோடுதான் சென்றேன். அங்கு சென்று அவற்றைப்
பார்வையிட்டு மீண்டபோது பண்பாட்டின் முன்னோடியான, தொன்மையான தமிழ்
இனத்தின் பிரதிநிதியாக , மனம் நிறைந்த பெருமிதத்துடன் வெளியே வந்தேன் என்ற
உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் உலகிலுள்ள மக்கள் எல்லாம் இன ரீதியாக , மதரீதியாக , நிற
ரீதியாக தம்மைப் பிரித்து வேறுபாடு கற்பித்து பிளவுண்டு நின்றபோது `யாதும் ஊரே யாவரும்
கேளிர் ; … `என்று கூறி மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் காட்டிய இனம் நம் தமிழ்
இனம். அதனால் பண்பாட்டின் முன்னோடிகள் என்று மகுடம் சூட்டப்பெற்ற பெருமிதம்
எமக்குள்ளது.
அந்தப் பெருமிதத்தை ஆழ, அகலப்படுத்தும் வகையில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர்
தோன்றிய ஒரு நாகரீகத்தின் முன்னோடிகளாக எமது இனம் இருந்திருக்கிறது என்ற உண்மையை
ஆதாரபூர்வமாக கண்ணுற்றபோது பெருமிதம் என்ற ஒன்று மட்டுமே எம் நெஞ்சமெலாம்
நிறைந்திருந்தது.
இது தனிப்பட்ட ரீதியில் எனது உணர்வை வெளிப்படுத்துகின்ற ஒரு வார்த்தையாகத்
தோன்றிடிடனும் வேர்களைத் தேடி...
நிகழ்வில் பங்கேற்ற அயலகத் தமிழ் இளைஞர்களின்
உணர்வாகவே இங்கு பார்க்கப்படவேண்டும். `ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம்
என்பதற்கொப்ப எனது உணர்வு வெளிப்பாடுகள் எமது உணர்வின் வெளிப்பாடுகளாகவும்
அமைந்திருந்தன என்ற உண்மையை இங்கு அறுதியிட்டுக் கூற விரும்புகிறேன்.
…………………………………..
முன் குறிப்பிட்டதுபோல கீழடியில் அகழ்வாய்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்து
அவற்றைச் சுற்றிப்பார்த்தோம்.
இவ்வாறான ஒரு இடத்துக்கு வருகைதந்து பார்வையிடுவது
என்பது எனது வாழ்வில் முதன் முறையாகக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம்.
ஒவ்வொரு இடமும்….ஒவ்வொரு பொருளும் ….ஒவ்வொரு அனுபவமும் … புதுமையானதாக
எமக்கு அமைந்திருந்தன. அகழ்வாய்வு இடம்பெறும் இடத்தில் பல நூற்றுக்கணக்கானோர்
பணியாற்றிக் கொண்டிருந்தனர். அங்கு 2200 வருடங்கள் பழமையான தொல்பொருள்
எச்சங்களைக் கண்டு நாம் மலைத்துப் போனோம் .
அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் , இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில்
அமைக்கப்பட்டிருந்த அரும் பொருட் காட்சியகத்துக்கு நாம் சென்றபோது அங்கு பணிபுரியும்
உத்தியோகத்தர்கள் எம்மை வரவேற்று தேநீர் உபசாரம் செய்ததோடு அன்பளிப்புகளையும் வழங்கினர். கீழடி மண்ணிலிருந்து வனையப்பட்ட சிறு சிறு பாத்திரங்களை அன்பளிப்புகளாகப் பெற்று அவற்றைக் கைகளில் ஏந்திய கணமே மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
அரும்பொருள் காட்சியகத்தில் நாம் பார்வையிட்ட தொல் பொருள் எச்சங்கள் ஒவ்வொன்றும் தமிழனத்தின் தொன்மையையும் , நாகரீகத்தையும் பறைசாற்றுவதாய் அமைந்திருந்தன.
2200 வருடங்கள் பழமையான ஒரு நாகரிகம் தமிழகத்தில் இருந்ததென்ற உண்மையை உலகுக்கு
எடுத்துச் சொல்ல தமிழக அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளை பாராட்டாமல் இருக்க
முடியவில்லை.
பார்வையிட்டு முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டோம். அவ்வேளை எம் மனம் பெருமிதத்தால் கனத்துக்கிடந்தது. மறு நாள் பார்வையிட்ட தமிழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பான அனுபவங்களோடு உங்களை மற்றொரு பதிவில் சந்திக்கிறேன். அதுவரை காத்திருப்போமா ?