நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வழக்கு எண் 18/9இ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு,மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகர் ஸ்ரீ.
இறுதியாக, இவர் நடித்த இறுகப்பற்று திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் ஸ்ரீயின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.
அதன்பின், ஸ்ரீ நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இன்றைய இளம் நடிகர்களில் நம்பிக்கைக்குரியவராக மாறியவர் தற்போது இன்ஸ்டாகிராமில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதுடன் ஆபாசமான விடியோயையும் வெளியிட்டார்.
இதைக் கண்ட ரசிகர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்ததுடன் ஸ்ரீக்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் தெரிவித்திருப்பதாவது: ‘நடிகர் ஸ்ரீராம் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவர் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால், அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஊடகங்களும் தவறான தகவல்களும் மிகவும் வருத்தமளிக்கிறது.
மேலும், அவரது உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
சிலரின் நேர்காணல்களில் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை, அதை முழுமையாக மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.