ஜெய்ப்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு (19) நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களை குவித்தது.
லக்னோ அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஐடன் மார்க்ராம் 45 பந்துளில் 66 ஓட்டங்களையும் மற்றும் ஆயுஷ் படோனி 34 பந்துகளில் 50 ஓட்டங்களையும் அப்துல் சமட் 10 பந்துகளில் 30 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
பந்து வீச்சில் ராஜஸ்தான் சார்பில் அதிகபடியாக வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 181 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் சார்பில் அதிகபடியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 74 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ஓட்டங்களையும் மற்றும் ரியான் பராக் 26 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் லக்னோ சார்பில் அதிகபடியாக ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.
இந்த வெற்றியுடன் லக்னோ அணியானது 2025 ஐ.பி.எல். புள்ளிகள் தரவரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.
அதேநேரம், நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் அணி பெற்றுக் கொண்ட தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகவும் இது அமைந்தது.