உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தொடர்பு உள்ளதென்பதை நிராகரிக்கமுடியாதென கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி தெரிவித்துள்ளார்.
சிறப்பு அறிக்கையை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ள கத்தோலிக்க திருச்சபை இதனை குறிப்பிட்டுள்ளது. இதன்போது ” பிள்ளையானுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டது எனவும், இதனை, பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டிருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் பிள்ளையானுடன் மிக நெருக்கமாக பணியாற்றியவரே ஆசாத் மௌலானா எனவும், அந்த நபர்தான் பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார் எனவும், ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையானின் தொடர்பை நாம் நிராகரிக்க முடியாது எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இந்தக் கைதும் விசாரணையும் எந்த அளவிற்கு நடைபெறும் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும்,அது குற்ற புலனாய்வு பிரிவிற்கு தெரியும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பிள்ளையான் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை முடிந்ததும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை தொடங்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.