ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் நகரில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, பல பயங்கரவாதத் தலைவர்கள் கலந்து கொண்ட பேரணியில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி ஒருவர் காஷ்மீரில் ஜிஹாத் மற்றும் இரத்தக்களரிக்கு அழைப்பு விடுத்தமை தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 18 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ராவல்கோட்டின் கை காலாவில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் நினைவாக இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஐக்கிய இயக்கம் (JKUM) என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான LeT தளபதி அபு மூசா, கூட்டத்தில் உரையாற்றுகையில் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இந்திய புலனாய்வு அமைப்புகளால் சரிபார்க்கப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் மூசா,
“மக்கள்தொகையை மாற்றுவதற்காக இந்தியா 370 மற்றும் 35A சட்டப்பிரிவை நீக்கியது.
நீங்கள் உங்கள் 10 இலட்சம் இராணுவத்தை நிறுத்தினீர்கள்.
புல்வாமா, பூஞ்ச், ரஜோரி ஆகிய இடங்களில் ‘ராம் ராம்’ என்பதை எதிரொலிக்க விரும்பினீர்கள்.
லஷ்கர்-இ-தொய்பா உங்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறது.
மோடி, உங்கள் மூடிய நீதிமன்ற அறைகளுக்குள், நீங்கள் உங்கள் உத்தரவுகளை நிறைவேற்றினீர்கள்.
ஆனால் போர்க்களம் முஜாஹிதீன்களுக்கு சொந்தமானது.
முயற்சி செய்து பாருங்கள், இன்ஷா அல்லாஹ், நாங்கள் தோட்டாக்களை பொழிவோம்.
உங்கள் கழுத்தை அறுப்போம், எங்கள் தியாகிகளின் தியாகங்களை மதிப்போம் – என்று கூறியுள்ளார்.
வன்முறைக்கான அழைப்பு விடுக்கப்பட்ட நேரம் குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த அழைப்பு வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் அண்மைய ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும்.