முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 87,800 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று காலை 7.30 மணி முதல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான , அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சிந்துசாவின் ஏற்பாட்டில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.