எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும்.
எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அடிப்படையில் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது உள்ளூராட்சி சபைகளில் இருந்து தொடங்குகின்றது. எனவே முதலாவதாக, தேசத்தைக் கட்டி எழுப்புவது என்ற அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளை எப்படிக் கட்டியெழுப்புவது என்று முடிவெடுக்க வேண்டும்.
இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் பொதுவான ஐக்கியத்திற்கு உடன்படப் போவதில்லை. எனினும் குறைந்தபட்சம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு வெளியே உள்ளூர் அதிகாரம் செல்வதைத் தடுப்பது என்ற அடிப்படையிலாது அவர்கள் தந்திரோபாயமாக ஒன்றிணைலாம். அதேபோல தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கு நிலையிலிருந்துதான் உள்ளூர் அதிகாரத்தைக் கையாள வேண்டும் என்ற விடயத்திலும் ஒரு புரிந்துணர்வுக்கு வரலாம்.
அப்படி ஒரு புரிந்துணர்வு ஏற்படுமாக இருந்தால், உள்ளூராட்சி சபைகளை இரண்டு தளங்களில் கட்டி எழுப்ப வேண்டியிருக்கும். முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவது.இரண்டாவதாக, உள்ளூர் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது.
உள்ளூர்த் தலைமைகளையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் அவற்றுக்கேயான தனித்துவங்களோடு கட்டி எழுப்பும் அதே சமயம் அவை தேசத்தைக் கட்டி எழுப்பும் பரந்தகன்ற நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாக அமைவதை உறுதிப்படுத்த வேண்டும்.
முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளை எப்படிக் கட்டி எழுப்புவது? கிராமங்கள் தான் தேசத்தின் இதயம். அதேசமயம் கிராமங்களில்தான் அதிகம் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். தமிழ்க் கிராமங்களில் சாதி சமய பால் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பலரும் சாதி அடிப்படையில் அல்லது சமய அடிப்படையில் அல்லது உள்ளூர் செல்வாக்கின் அடிப்படையில்தான் தெரிவு செய்யப்பட்டு இருப்பார்கள். அவர்களில் பலர் சாதி உணர்வுகளுக்கும் சமய உணர்வுகளுக்கும் உட்பட்டவர்களாக இருப்பர். பால் சமத்துவம் தொடர்பில் விழிப்பில்லாதவர்களாக இருப்பர். எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து அவர்களை வார்த்தெடுக்க வேண்டும்.
சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. மதவெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது.ஆண் மேலாதிக்கவாதி அல்லது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர், உள்ளூர்த் தலைவராக இருக்க முடியாது. தேசியவாதியாகவும் இருக்க முடியாது. எனவே உள்ளூர்த் தலைவர்களிடம் தேசியப் பண்புகளை எப்படி வளர்த்தெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். அங்கிருந்து தொடங்கினால்தான் மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் முடிவில் தாயக மட்டத்திலும் தேசியப் பண்புமிக்க தலைமைகளைக் கட்டி எழுப்பலாம். கீழிருந்து மேல் நோக்கி. இது முதலாவது.
இரண்டாவதாக, தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்புவது?
ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதன் எல்லைக்குட்பட்டு பொருத்தமான பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அது தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் பிரிக்கப்படுவியலாத பகுதியாகவும் இருக்க வேண்டும். அதாவது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதியாக கிராமங்களைக் கட்டி எழுப்புவது. மறுவளமாகச் சொன்னால், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தை கிராமங்களைக் கட்டி எழுப்புவதில் இருந்தே தொடங்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதற்கேயான தனித்துவம் மிக்க பொருளாதாரத் தரிசனத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளூர் அதிகார சபை என்று அது அழைக்கப்பட்டாலும் அதற்குள்ள அதிகாரங்கள் வரையறைக்குட்பட்டவை. தையிட்டி விகாரை ஆகப்பிந்திய உதாரணம். எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் இணைத்துக் கொண்டு எப்படிக் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைப் பிரதேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது என்று திட்டமிட வேண்டும். பொதுவாகச் சொல்லுவார்கள், உள்ளூராட்சி சபைகள் பிரசவத்தில் இருந்து மரணம் வரையிலும் உள்ளூர் நிலைமைகளின் மீது தலையிடக்கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன என்று. நடைமுறையில் அந்த அதிகாரங்கள் போதாமல் இருக்கலாம். ஆனால் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உள்ளூர்ப் பொருளாதாரத்தைத் தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்புவதற்கு வேண்டிய தீர்க்கதரிசனம் மிக்க திட்டமிடல்கள் வேண்டும்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசுத் தலைவர் அனுர கூறியதாகக் கூறப்படும் ஒரு விடயம் அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் சபைகளுக்கு நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிதிகளை வழங்குவோம் என்ற பொருள்பட அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவித்தன. அரசு தரப்பு அதை மறுத்திருந்தது. ஆனால் அரசுத் தலைவர் பேசும் ஒரு கூட்டத்தில் அவருடைய பேச்சின் மொழிபெயர்ப்பை அப்படித்தான் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பிரதேச சபைகளுக்குத்தான் அவர்கள் நிதியைத் தடையின்றி வழங்குவார்கள் என்று பொருள் கொள்ளத்தக்க ஒரு பேச்சு.
எனவே அரசாங்கம் நிதியை வழங்குமோ இல்லையோ, புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளை உள்ளூர் கள நிலைமைகளுக்கு ஏற்ப எப்படிப் பெற்றுக் கொள்வது? உள்ளூரில் இருக்கக்கூடிய வளங்களை எப்படி உச்சமாகப் பயன்படுத்துவது?
புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விடயத்தில் புதிய தரிசனங்கள், புதிய திட்டமிடல்கள் வேண்டும். பெரும்பாலான தமிழ்க் கிராமங்களில் யாரோ ஒருவர் அல்லது பல புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வழிகளிலும் உதவிகளைச் செய்து வருகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் இவ்வாறு உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இந்த உதவிகளை உள்ளூராட்சி சபைகள் பொருத்தமான விதங்களில் ஒருங்கிணைக்கலாம்.
அடுத்தது முக்கியமாக,எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்தாலும் அந்தத் திட்டங்கள் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். மிகக் குறிப்பாக சமூகப் பங்களிப்புடன் கூடிய பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கிராமத்தை ஒரு பசுமை பூங்காவாக மாற்றக்கூடிய பொருளாதாரத் தரிசனங்களைக் கொண்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தனித்துவமிக்க பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர். அவர் ஓர் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் கூட. தன்னுடைய துறைக்கு வெளியே சென்று, ஆயிரக்கணக்கான மரங்களை நடுவித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக, காரைநகர்ப் பகுதியில் நாலுக்கும் மேற்பட்ட குளங்களை அவர் புணரமைத்தார். குளங்களை நோக்கிச் செல்லும் நீரோடும் வாய்க்கால்களைப் புனரமைத்தார். இரண்டு புதிய குளக்கட்டுகளையும் அவர் கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அது அவருடைய மருத்துவ நிர்வாகச் செய்முறைக்கு அப்பாற்பட்ட விடயம். அவர் தன்னார்வமாக அந்தப் பசுமைத் திட்டங்களை முன்னெடுத்தார். அவர் ஒரு முன்னுதாரணம்.
இந்தியாவில் இதுபோன்று பல முன்னுதாரணம் மிக்க மனிதர்களைக் கிராமங்கள் தோறும் காண முடியும். தமது சொந்தச் செலவில் பாலத்தை கட்டியவர்கள், தமது சொந்த உழைப்பினால் சிறு காடுகளை உருவாக்கியவர்கள், தமது சொந்த உழைப்பினால் குளங்களைத் தூர் வாரியவர்கள், வாய்க்கால்களைப் புதுப்பித்தவர்கள்…. என்று பலரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பார்க்கின்றோம். அவ்வாறான தன்னார்வமாக இயங்குகின்ற உன்னதமான சமூகத் தொண்டர்களை உள்ளூராட்சி சபைகள் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பலத்தையும் போதிய வளங்களையும் கொடுத்து அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.அதாவது யார் முதலில் பசுமைக் கிராமங்களைக் கட்டியெழுப்பப் போகிறார்கள் என்ற போட்டிதான் இருக்க வேண்டும்.மாறாக எந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவது? எந்தத் தலைவருக்கு விசுவாசிகளை, வாலாட்டிகளைக் கட்டியெழுப்புவது? என்ற போட்டி இருக்கக்கூடாது.