மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இதன் நேரடி விளைவாக, திருகோணமலை – நிலாவெளி கடற்கரையை வாழ்வாதாரமாகக் கொண்ட சுற்றுலாப் படகு சேவை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டமை மற்றும் விமானக் கட்டண அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதனால் நிலாவெளி மற்றும் புறாத்தீவு (Pigeon Island) நோக்கிய படகுச் சவாரிகள் மந்தகதியில் காணப்படுகின்றன.
இலங்கையில் அண்மைக்காலமாக எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த விலை உயர்வால் படகுச் சவாரி நடாத்துவதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க முடியாத நிலையில் ஓட்டுநர்கள் உள்ளனர்.
உள்ளூர் தொழிலாளர்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக வெளிமாவட்டப் படகுகளின் வருகை அமைந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தொழில் புரிவதற்காகப் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களால் தமக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக உள்ளூர் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
”சுற்றுலா படகு சேவைக்கு அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிப் பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி பிற மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து தொழிலில் ஈடுபடுபவர்களால், பாரம்பரியமாக இத்தொழிலை நம்பியுள்ள எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது” என நிலாவெளி படகு ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, படகு ஓட்டுநர்களுக்கு எரிபொருள் நிவாரணம் அல்லது விஷேட சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் முறையான அனுமதிப்பத்திரமின்றி வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தொழில் புரிபவர்களைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை நிலாவெளி படகு உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.














