முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச் சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அவர் சமூகமளித்திருந்த நிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
………………………………….
ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.
அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி, குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.