11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அம்பாறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை நகர பாடசாலை ஒன்றில் கடந்த மே 16 ஆந் திகதி மாலை தரம் 5 மாணவர்கள் 11 பேரின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரான பௌத்த துறவி தமது பிள்ளைகளை கொடூரமாகத் தாக்கியதாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டதுடன் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான வைத்திய அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் நேற்று (23) 11 மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய சந்தேக நபரான வணக்கத்திற்குரிய சுஹதகம சிலாரத்தன தேரர் அம்பாறை மகளிர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அம்பாறை நீதிமன்ற நீதவான் நவோமி விக்ரமரத்ன முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டதுடன் மறு விசாரணை எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.