அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை மேலும் நீட்டிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி, நேற்று முதல் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு நிறுவனத்தின் இயக்கங்கள் யாவும் முடக்கப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கி அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ், ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும், முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு மத்தியவங்கி தீர்மானித்துள்ளது.