ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, தனது நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நேற்று (03) இரவு சுமார் 8.45 மணியளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் (03) விமான நிலையத்தில் வைத்து 39 வயதுடைய கம்பஹா தேவா என்ற நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளரென தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல மற்றும் மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தலைமறைவாகியுள்ள கெஹல்பத்தர பத்மேவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

















