முக்கிய நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குப் புறப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.
செப்டெம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொண்டார்.
இந்த நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் தகவலின்படி,
ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோவும், டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக அருண ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஜனாதிபதியுடன் அமெரிக்க விஜயத்தில் பங்கேற்றுள்ள வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதவி வகிக்கும் வௌிவிவகாரம், வௌிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.















