பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பத்தாவது முறையாகப் பதவியேற்றார்.
தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட 74 வயதான சோசலிசத் தலைவர், பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்றார்.
அவருடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்த மூவரையும் தவிர, 24 அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் முன்னிலையில், ஆளுநர் ஆரிப் மொஹமட் கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்று, 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் புதன்கிழமை (19) பீகார் ஆளுநர் ஆரிஃப் மொஹமட் கானைச் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததுடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை கோரியமையும் குறிப்பிடத்தக்கது.














