நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களின் தரவுகள் தற்போது எந்த நீர்த்தேக்கமும் வெள்ள மட்டத்தில் இல்லை என்பதைக் காட்டுவதாகக் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 50 முதல் 100 மில்லி மீட்டர் வரை அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
களனி மற்றும் களு கங்கை படுகைகளில் 50–100 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் ஜின் கங்கை, நில்வல கங்கை மற்றும் அத்தனகலு ஓயா பகுதிகளில் சுமார் 50 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்த மழைப்பொழிவு ஆற்று நீர் மட்டத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை.
இதற்கிடையில், திணைக்களத்தின் கீழ் உள்ள நீர்ப்பாசன முறைகளைக் கருத்தில் கொண்டு, ராஜாங்கனை, தெதுரு ஓயா, நாச்சதுவ, சேனநாயக்க சமுத்திரம், வெஹெரகல மற்றும் லுனுகம்வெஹெர உள்ளிட்ட சுமார் 30 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டத்தை படிப்படியாகக் குறைப்பதற்காக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு மற்றும் ஒட்டுமொத்த நீர் மேலாண்மைத் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி, இந்த நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
வரும் நாட்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
நீர்ப்பாசணத் திணைக்களம் தொடரும் நிலைமை குறித்த புதுப்பிப்புகளை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.












