கடந்த 2014ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்தபோது ராஜித சேனாரத்னவினால் நிதிமோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜனவரி மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் இன்று உத்தரவிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மோதரை மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியபோது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழங்குத் தாக்கல் செய்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அனில் சில்வா, திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பு பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்ப விரும்புவதாகவும், அவ்வாறு செய்வதற்கு முன்னர், அவற்றைப் படிப்பதற்கு அவகாசம் கோருவதாகவும் நீதிமன்றத்தில் தனது மனுவை சமர்ப்பித்தார்.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினர்.
இதனை தொடர்ந்து வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
















