காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் 120 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் டெய்லர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகள் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான டெய்லர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் நேற்று (23) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.கே. திலகரெத்தின தெரிவித்தார்
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான வர்ண ஜயசுந்தரவின் ஆலோசனையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலா ரத்னாவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. திலகரெத்தின மற்றும் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமீர தலைமையில் இரண்டு பொலிஸ் குழுக்கள் சம்பவ தினமான நேற்று இரவு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு குழுவும் காத்தான்குடி பகுதியில் ஒரு குழுவுமாக ஒரே நேரத்தில் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் காத்தான்குடி எப்.சி. வீதியில் வியாபாரத்துக்காக போதை பொருளை எடுத்துக் கொண்டு சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
இதேவேளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் வைத்து அந்த பகுதியில் ஆடைகள் தைக்கும் கடையான ஈஸ்ரன் ரெய்லர் சொப்பின் உரிமையாளரான வியாபாரியை 110 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு வியாபாரிகளையும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.













