வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்துள்ளன.
வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,
இத்திட்டம் தொடர்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது எனவும் இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்ப்பட வேண்டும் என்று நாங்கள் மாவட்ட அபிவிருத்திக்கூட்டங்களிலும், அமைச்சர்களிடமும் கேட்டிருந்தோம் எனவும் இந்த திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ்மக்களுக்கு பாரிய ஒரு பின்விளைவை ஏற்ப்படுத்தக்கூடிய திட்டமாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.
இதவேளை, கிவுள் ஓயாத்திட்டத்திட்டம் தொடர்பாக எமக்கு இருக்கும் சந்தேககங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை எனவே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம் எனவும் இது தொடர்பாக அனைத்து தமிழ்கட்சிகளோடும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம் எனவும் அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் அவர்களும் இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
வவுனியா வடக்கின் பொதுமக்கள்,பொது அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நாளையதினம் கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை நெடுங்கேணி பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடுவதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

















