அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, 300 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோருமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
11 மீனவர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 263 கிலோ கிராம் போதைப்பொருளையும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, குறித்த போதைப்பொருளை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோருமாறு உத்தரவிட்டார்.
கடந்த 25 ஆம் திகதி சந்தேகத்திற்குரிய 11 மீனவர்கள் பயணித்த பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 109.422 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 112.258 கிலோ கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டிருந்தன.
அப்போதைப்பொருள் தொகை 15 பாதுகாப்புப் பைகளில் இடப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நீதிமன்றப் பதிவாளரின் கண்காணிப்பின் கீழ் குறித்த போதைப்பொருளுக்கு முத்திரை இடப்பட்டு, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
















