பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் குறித்த மேலும் பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியான நிலையில் பலரும் அவருடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான மின்னஞ்சல் கசிவுகளில் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியான சாரா பெர்குசன் (Sarah Ferguson ) குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்நிலையில் சாரா பெர்குசன் மற்றும் இளவரசிகள் பீட்ரைஸ் (Beatrice), யூஜினி (Eugenie) ஆகியோருக்கு, தற்போது வெளியாகியுள்ள எப்ஸ்டீன் மின்னஞ்சல் ஆதாரங்கள் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை, ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி சாரா மற்றும் அவரது மகள்களின் பெயர்கள் குறித்த ஆவணங்களில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனை, சாரா பெர்குசன் “நான் எப்போதும் விரும்பிய ஒரு சகோதரர்” என்று பாராட்டியுள்ளதுடன் மேலும், எப்ஸ்டீனிடம் அவர் பணம் கேட்டது மற்றும் அவர்களுக்கிடையிலான நிதி ரீதியான கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விடயங்களும் குறித்த மின்னஞ்சல் ஆவணங்களில் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கடந்த 2011-ம் ஆண்டு எப்ஸ்டீன் தனது மக்கள் தொடர்பாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சாரா பெர்குசனைப் பயன்படுத்தி தனது பெயரைக் காப்பாற்ற முயன்றமை தெரியவந்துள்ளது.
மேலும், 2009-ம் ஆண்டு ஒரு வணிகத் தோல்விக்குப் பின்னர் , சாரா பெர்குசன் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “இன்று வாடகை செலுத்த எனக்கு அவசரமாக 20,000 பவுண்டுகள் தேவை எனவும் இல்லையெனில் வீட்டு உரிமையாளர் செய்தித்தாள்களுக்குச் சென்றுவிடுவார் என்று மிரட்டுகிறார் எனவும் ஏதேனும் வழி இருக்கிறதா?”என்று கேட்டுள்ளார்.
இந்நிலையில் 15 ஆண்டுகளாக அவருக்கு தான் நிதி உதவி செய்து வருவதாக எப்ஸ்டீன் ஒரு மின்னஞ்சலில் உரிமை கோரியுள்ளார்.
இந்நிலையில் இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் எப்ஸ்டீன் 2008-ல் சிறார் பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட பின்னர் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த மின்னஞ்சல்கள் எந்தவொரு தவறான செயலையும் நேரடியாகக் குறிப்பிடப்படாத நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.















