இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்யா புதன்கிழமை (04) கூறியுள்ளது.
மேலும், எரிசக்தி இறக்குமதியை பல்வகைப்படுத்துவதற்கான புது டெல்லியின் முயற்சிகள் புதிதல்ல என்றும் சுட்டிக்காட்டியது.
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்தும், ஒருவேளை வெனிசுலாவிலிருந்தும் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மசகு எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்தது.
ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அறிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,
இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ரஷ்யா மட்டுமே வழங்குவதில்லை என்பதை நாங்கள், ஏனைய அனைத்து சர்வதேச எரிசக்தி நிபுணர்களுடன் சேர்ந்து நன்கு அறிவோம்.
இந்தியா எப்போதும் ஏனைய நாடுகளிடமிருந்து இந்த பொருட்களை வாங்கியிருக்கிறது.
எனவே, இந்தியாவின் நிலைப்பாட்டில் ரஷ்யா அசாதாரணமான எதையும் நாங்கள் காணவில்லை.
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் ரஷ்யாவிற்கு இதுவரை வரவில்லை – என்றார்.
இதற்கிடையில், ரஷ்ய மசகு எண்ணெயை முழுமையாக மாற்றுவது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நடைமுறைக்கு மாறானது என்று ரஷ்யாவில் உள்ள எரிசக்தி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியா பதப்படுத்தும் மசகு எண்ணெயில் கிட்டத்தட்ட 88 சதவீதத்தை பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களாக இறக்குமதி செய்கிறது.
2021 வரை இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் வெறும் 0.2 சதவீதமாக இருந்தது, ஆனால் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவைத் தவிர்த்த பின்னர் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது.
நிகழ்நேர பகுப்பாய்வு நிறுவனமான Kpler இன் தரவுகளின்படி, இந்தியாவின் ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதி 2026 ஜனவரி முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
இது முந்தைய மாதத்தில் சராசரியாக 1.21 மில்லியன் பீப்பாய்களாகவும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட 2 மில்லியன் பீப்பாய்க்கும் அதிகமாகவும் இருந்தது.












