முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு அக்கரைவெளியில் தற்போது 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும்,
வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப்பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடைசெய்யப்பட்ட 5000 வரையிலான நெல் மூட்டைகள் அங்கிருந்து எடுத்துச்செல்லமுடியாமல் வயல்வெளிகளிலும், வீதிகளிலும் நீண்டநாட்களாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு எடுத்துச்செல்ல முடியாதநிலையில் 15 நாட்கள்வரையில் அங்கு நெல்மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்மூட்டைகள் மூழ்கிப்பாதிப்படைந்துள்ளன.
இதனால் அக்கரைவெளியில் தற்போது 200இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனைவிட இன்னும் அறுவடைசெய்யவேண்டிய நிலையில் பலநூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் அக்கரைவெளியில் காணப்படுகின்றபோதும் குறித்த வீதிப் பாதிப்பால் விவசாயிகள் அறுவடைசெய்வதிலும் தயக்கங்காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்புநிலமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியள்ள பாதிப்பு நிலமைகளைச் சீர்செய்வதற்கு தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

















