இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.
அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை.
2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் இந்த அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை UAPA தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 ஆம் ஆண்டு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை ஒத்திவைக்கக் கோரினார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய வைகோ பின்வருமாறு கூறினார்,
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நானே நேரில் முன்னிலையாகி இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தேன்.
மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு: “புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பது.
இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.
வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன்.
தலைவர் பிரபாகரனின் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை.
ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம்.
மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது.
ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன்.
ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது.
மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது.
ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide).
அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது – என்றார்.
















