2026.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்:
01. சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் – SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்தல் மற்றும் 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட சிம் அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்தல்
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் -SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகள் 2019.08.02 அன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த ஒழுங்குவிதிகள் அன்றைய தினத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள சிம் அட்டைகளுக்கு மாத்திரம் ஏற்புடையதாகும்.
அதனால், 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருசில சந்தாதாரர்கள் தொடர்பான தகவல்கள் தொலைதொடர்பு இயக்கும் கம்பனிகளிடம் இல்லாததுடன், அதனால் ஒருசில சட்ட விசாரணை நடவடிக்கைகளின் போது பிரச்சினையான நிலைமைகள் தோன்றியுள்ளன.
அத்துடன், 16 – 17 வயதுக்கிடையிலான சந்தாதாரர்களைப் பதிவு செய்வதற்கும், எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகள் வழங்குவதற்கும் ஏற்புடைய புதிய ஏற்பாடுகளையும் உள்ளடக்கி தற்போது நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சிம் அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீள்பதிவு செய்வதற்காக ஏற்பாடுகளை தயாரித்து மற்றும் தற்போது 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் – SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகளைப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்து புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகம் செய்வதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02.ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு குடியரசின் தேசிய பாதுகாப்புப் படையணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஐந்து வருடகாலத்திற்கு 2012 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் குறித்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் 2023 ஆம் ஆண்டில் முடிவடைந்த பின்னர், இருதரப்பினர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், பயிற்சி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், பணிக்குழாம் பரிமாற்று நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல், ஒருங்கிணைந்த ஆய்வுகள் மற்றும் கற்கைகளை ஒழுங்குபடுத்தல், கல்விசார் வெளியீடுகள் மற்றும் ஏனைய தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல் மற்றும் கலாச்சார மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டு பரிமாற்று நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தல் போன்ற நோக்கங்களுடன் திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
03. முன்னோடிக் கருத்திட்டமாக விசேட தேவையுள்ள நபர்களுக்கான வசதிகளுடன் கூடிய வளிச்சீராக்கிகள் பொருத்தப்பட்ட தாழ்வான மிதிபலகையுடன் கூடிய 10 புதிய பேரூந்துகளை சேவையில் அமர்த்துதல்
‘கிளீன் ஸ்ரீலங்கா’ கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி, முன்னோடிக் கருத்திட்டமாக விசேட தேவையுள்ள நபர்களுக்கான வசதிகளுடன் கூடிய வளிச்சீராக்கிகள் பொருத்தப்பட்ட தாழ்வான மிதிபலகையுடன் கூடிய பேரூந்து சேவை முன்னோடிக் கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதற்காக 10 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், 2026.03.15 ஆம் திகதியாகும் போது குறித்த பேரூந்துகள் எமது நாட்டுக்குக் கிடைக்கப் பெறவுள்ளன. குறித்த பேரூந்துச் சேவைகள் மற்றும் பராமரிப்புக்குத் தேவையான பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இயலுமை இன்மை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், பேரூந்து போக்குவரத்து நவீனமயப்படுத்தலுக்கான ஆரம்பப் படிமுறையாக நவீன மற்றும் வசதிகளுடன் கூடிய, முன்னேற்றகரமான தொழிநுட்பங்களுடன் கூடிய 100 பேரூந்துகளை கொழும்பு நகர்ப்புறங்களில் பயணிகள் போக்குவரத்துக்கான கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, 2025.07.21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள லங்கா மெட்ரோ ட்ரான்ஸ்போர்ட் (தனியார்) கம்பனிக்கு குறித்த 10 பேரூந்துகளை ஒப்படைத்து, அவற்றின் நடவடிக்கைகளை இக்கம்பனியின் கீழ் மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. ‘தேசிய கனிய வளங்கள்; கொள்கை’ – 2026
‘தேசிய கனிய வளங்கள் கொள்கை’, 1999 ஆம் ஆண்டில் முதல் தடவையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய வளங்கள் தொடர்பாக இற்றைப்படுத்தப்பட்ட தரவுக்கட்டமைப்பொன்றை உருவாக்கல், கனய வளப் பொருட்கள் ஏற்றுமதிக்கான பெறுமதி சேர்த்தல், கனிய வளங்கள் சார்ந்த உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல், கனிய வளங்களை பிரித்தெடுத்தல் மற்றும் சுற்றாடலை பேண்தகு வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் கனியவளப் பொருட்கள் பிரித்தெடுப்பின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி 2023 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு திருத்தப்பட்டுள்ள தேசிய கனிய வளங்கள்; கொள்கை, சமகால அரசின் ‘வளமான நாடு- அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்தில் ‘பேண்தகு வளப்பயன்பாடு – உயரிய அனுகூலங்களைப் பெறல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் கொள்கைக் கோட்பாடுகளுக்கு இணங்க மீண்டும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள ‘தேசிய கனிய வளங்கள்; கொள்கை – 2026’ அமுல்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பதுளை போதனா மருத்துவமனையில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணித்துப் பூர்த்தி செய்வதற்கான உத்தேச பேராசிரியர் பிரிவை தாபித்தல்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிகிச்சைப் பயிற்சி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பதுளை பொது மருத்துவமனை, போதனா மருத்துவமனையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. குறித்த பொது மருத்துவமனையின் சிகிச்சைப் பணிகளுக்குத் தேவையான பேராசிரியர் அலகுகளின் மூலம் கற்பித்தல் வசதிகளில் கிட்டத்தட்ட 80மூ வீதமானவற்றைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பத்து அடுக்குமாடிகளுடன் கூடிய சிறுநீரக சிகிச்சைப் பிரிவின் வேலைகளை துரிதமாகப் பூர்த்தி செய்யும் வகையில், அதற்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் ஆலோசனை சேவைகள் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம்
2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல்வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைச்சு தனது ஏனைய ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. கண்வில்லைகளை விநியோகிப்பதற்கான பெறுகை
கண்களில் வெண்படலப்படிவை அகற்றுதல் அல்லது கிட்டப்பார்வை தொடர்பான கண் சிகிச்சைகளின் போது கண்ணுக்கு பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் 35 வகையான கண்வில்லைகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 05 விலைமுறிதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையால் முன்வைக்கப்பட்டுள்ள விதப்புரைகளின் அடிப்படையில், குறித்த 35 வகையான கண்வில்லைகளில் 16 வகையான கண்வில்லைகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகைக்கு கணிசமானளவு விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள விலைமனுதாரரான Jayasuriya Associates, Kandy kw;Wk; Elshaddai Enterprises (Pvt) Ltd, Colombo இற்கு வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தின் நிர்வாகக் கட்டிடத்தை நிர்மாணித்தல்
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையம் தற்போது சிறிய கட்டிடங்கள் சிலவற்றில் பல சிரமங்கள் மத்தியில் இயங்கி வருவதால், கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களும், சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு வருகை தருகின்ற பொதுமக்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்குப் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான மதிப்பீட்டுச் செலவு 75.94 மில்லியன் ரூபாய்களாகும். அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை 2026-2028 நடுத்தரக்கால வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் அமுல்படுத்துவதற்கும், கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகளை மத்திய பொறியியல் பணிகள் தொடர்பான ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 2026/2027 காலப்பகுதிக்கான சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு உராய்வு எண்ணெய் வழங்கல் மற்றும் விநியோகம்
சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தில் காணப்படுகின்ற டீசல் இயந்திரத்தின் மூலம் இயக்கப்படும் 12 மின்னுற்பத்தி இயங்திரங்களின் வலுசக்தி கேள்வி தொடர்ச்சியாக மின்னுற்பத்தி செய்யப்படும் மின்னுற்பத்தி நிலையமாக (base load plants) இயங்கி வருகின்றது.
குறித்த மின்னுற்பத்தி இயந்திரங்களுக்குத் தேவையான உராய்வு எண்ணெய் வழங்கல் மற்றும் விநியோகத்தை அந்தந்த தொழிற்பாட்டு மற்றும் பராமரிப்புக் கையேடுகளில் குறிப்பிட்டவாறு ஆரம்ப உபகரண உற்பத்தியாளரால் விதந்துரைக்கப்படும் உராய்வு எண்ணெயப் பட்டியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வகுதியின் கீழேயே மேற்கொள்ளப்படல் வேண்டும்.
சமகால உராய்வு எண்ணெய் விநியோகத்தர்களின் ஒப்பந்தம் 2026.05.09 அன்றுடன் முடிவுடையவுள்ளதுடன், பின்னர் தொடர்ந்துவரும் ஆண்டுக்குப் புதிய விநியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையைக் கடைப்பிடிப்பதற்காக வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க துறைமுக நகர (அபிவிருத்தி நிர்வாகம்) ஒழுங்குவிதிகளுக்கான திருத்தங்களைச் சமர்ப்பித்தல்
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் துறைமுக நகரத்திலுள்ள கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புக்களின் அம்சங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (அபிவிருத்தி நிர்வாகம்) ஒழுங்குவிதிகள் 2023.06.02 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஒழுங்குவிதிகள் இதற்கு முன்னர் 2023.11.17 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர இடப்பரப்பு உள்ளிட்ட இடப்பரப்புக்களின் பொருத்தப்பாடு, அடுக்குமாடி அபிவிருத்திக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச உயரத்தை அதிகரித்தல் மற்றும் நடைமுறைகள் தொடர்பான இயைபான வகுதிகள் பற்றி இவ் ஒழுங்குவிதிகளில் மேலும் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் 2025.12.29ம் திகதிய அதிவிசேட அறிவித்தலின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 71(4) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளுக்கமைய குறித்த திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள், வணிகம் மற்றும் முதலீடுகள் போன்ற துறைகளை உள்ளடக்கி இலங்கையும் ஜப்பானும் நீண்டகால பொருளாதாரத் தொடர்புகளைப் பேணி வந்துள்ளன.
இருதரப்பு பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மேலதிகமாக இலங்கை மற்றும் ஜப்பான், தெற்காசிய சந்தையை ஒருங்கிணைப்புச் செய்து இலங்கை மூலோபாய ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரப் பாதையாக நிலைநிறுத்துவதற்காக மூலோபாயங்களைத் தேடிக் கண்டறிவதற்கு இரு நாடுகளுக்கிடையில் விரிவான தொடர்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் வணிகம், முதலீடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு மற்றும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பாக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வணிக, வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. பணக் கொடுக்கல் வாங்கல் அறிக்கைப்படுத்தல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பணத் தூய்தாக்கல் தடுப்பு (திருத்தச்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2025.05.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பணக் கொடுக்கல் வாங்கல் அறிக்கைப்படுத்தல் (திருத்தச்;) சட்டமூலம் மற்றும் பணத் தூய்தாக்கல் தடுப்பு (திருத்தச்) சட்டமூலங்களுக்கு மேலும் உத்தேசத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2026.01.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் இறுதி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
அரசிறை வருமானத்தின் அடிப்படையில் அரசி நிதி ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் வரிக் கொள்கையை மேம்படுத்துவதற்காக, உத்தேச வரி மறுசீரமைப்புக்களை உள்ளடக்கி 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்குத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2025.05.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.















