சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். சிகிச்சையின்றி வீடு திரும்பிய அந்தப் பூனை அடுத்த நாளே உயிரிழந்துள்ளது.
பூனையின் உயிரிழப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக விலங்குவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறுவை சிகிச்சைக்காக 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (Swiss Francs) செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் இலங்கை பெறுமதி சுமார் 402, 082 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.













