இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று மாலை ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
தேடுதல் பணிகளுக்குப் பின்னர், சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி, வைத்தியர்கள், உதவியாளர்கள் மற்றும் விமானிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம், ராஞ்சியில் இருந்து மாலை 7:11 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.00 மணியளவில் டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
விபத்து நடந்த இடம் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் அங்கு சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்பட்ட நிலையில், இன்று அனைத்து சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறினால் விமானம் தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.சிவில் விமானப் போக்குவரத்து பணியகம் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அவசர சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளியும், அவருக்கு உதவச் சென்ற மருத்துவக் குழுவினரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















