கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்றையதினம் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் வழிநடத்தலின் கீழ், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இணைந்து தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பல இடங்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமாக அடையாளம் காணப்பட்ட ஒரு தயிர் விற்பனை நிலையத்தில் இருந்து மாதிரிகள் கைப்பற்றப்பட்டன.
அவை மேலதிக பகுப்பாய்விற்காக அரசு ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளி பிரதேசங்களில் தயாரிக்கப்பட்ட தயிர்களின் சுகாதார நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், அனுமதியின்றி வெளிப்பிரதேசத்திலிருந்து தயிர்களை கொண்டு வந்து விற்பனை செய்ததும், சுகாதாரச் சான்றிதழ்கள் இன்றி, முறையற்ற லேபிள் ஒட்டுதல் உள்ளிட்ட குறைபாடுகளுடன் விற்பனை செய்த விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
இவ்வகை சட்டவிரோத செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, அவ்வகை பொருட்களை பிரதேசத்திலிருந்து அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்















