யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர், கே.எம்.செல்லப்பாவின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கே.எம் .செல்லப்பா 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்தார்.
யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணியாற்றியதோடு, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையாளராகவும் திகழ்ந்தார்.
ஆசியாவின் பெரும் நூலகத்தை வழங்கிய கே.எம்.செல்லப்பா, 1958 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 24 ஆம் திகதி மறைந்தார்.
புத்தூர் செல்லப்பா என அழைக்கப்படும் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா,1933 ஆம் ஆண்டில் புத்தூரில் தன்னிடமிருந்த நூல்களைக்கொண்டு சிறியதொரு நூலகத்தை ஆரம்பித்தார்.
அதன்பின்னார், 1934 ஆண்டு ஜூன் மாதம் பொது நூலகம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டது.
அதற்காக, தன்னிடமிருந்த நூல்களையும், பலரிடமும் சேர்த்த ஆயிரத்து 184 ரூபா 22 சதம் பணத்தையும் வழங்கினார்.
பின்னர் யாழ்.வைத்தியசாலை அருகில் வாடகை வீட்டில் 844 நூல்களுடனும், 34 பருவ இதழ்களுடனும் நூலகம் இயங்கியது.
1935 இல் யாழ்.பட்டினசபை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வாடி வீட்டிற்கு நூலகம் மாற்றப்பட்டது.
அதன்பின்னர் 1953 ஆம் ஆண்டில் தற்போதுள்ள இடத்தில், திராவிட கலையம்சம் பொருந்திய அறிவுக்கோயிலாக அமைக்கப்பட்டது.














