பிரித்தானியாவின் குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளின் தாயான அலிஸ் வெப் (Alice Webb), கடந்த 2024 செப்டம்பர் 24 ஆம் திகதி அறுவை சிகிச்சை அல்லாத ‘பிரேசிலியன் பட் லிஃப்ட்’ (BBL) எனும் அழகுசாதன சிகிச்சையை மேற்கொண்டார்.
சிகிச்சை முடிந்து சில மணிநேரங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொலிஸார் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணையை ஆரம்பித்தனர் .
இந்நிலையில் இந்த மரணம் தொடர்பாக ‘பிரிட்டிஷ் லிப் கிங்’ (British Lip King) என்று அழைக்கப்படும் 34 வயதுடைய ஜோர்டான் ஜேம்ஸ் பார்கே (Jordan James Parke) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் கடந்த புதன்கிழமை லண்டனில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவரும் ஒரு அழகுசாதன சிகிச்சையை மேற்கொண்ட பின்னரே உயிரிழந்திருக்கலாம் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மரணமடைந்துவிட்டதால், அலிஸ் வெப்பின் மரணம் தொடர்பான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருவதாக குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அலிஸின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இனி எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இதேவேளை, கொலைக்குற்ற விசாரணை மூடப்பட்டாலும், மரண விசாரணை அதிகாரி (Coroner) சார்பாக இரு மரணங்கள் குறித்தும் தனித்தனியாக மரண விசாரணை (Inquest) நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலிஸ் வெப்பின் மரணம் தொடர்பாக முன்னதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














