ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவிற்கு, அழைப்பாணை (Notice) கிடைக்கப்பெறும் போது மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
மேல் நீதிமன்றத்தின் அழைப்பாணை கிடைக்கும் போது, சந்தேகநபரை அந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.
2017 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6 மாதங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக கோரப்பட்டிருந்த 3 நீண்டகால டெண்டர்களை ரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையில் 27 உடனடி டெண்டர்களின் கீழ் எரிபொருளைக் கொள்வனவு செய்ததன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் அதற்குத் துணையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.













