ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் (Holyrood) தற்கொலைக்கு மருத்துவ உதவி வழங்கும் “உதவிபெறும் மரணம்” (Assisted Dying) குறித்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த உணர்வுப்பூர்வமான விவாதங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
லிபரல் டெமக்ரட் கட்சியின் உறுப்பினர் லியாம் மெக்ஆர்தர் (Liam McArthur) முன்மொழிந்துள்ள இந்தச் சட்டமூலம், ஆறு மாத காலமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் உள்ள, தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட முதிர்ச்சியடைந்த நபர்கள், தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள மருத்துவ உதவியை நாடுவதை அனுமதிக்கிறது.
இது குறித்த 300-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் விவாதிக்கப்பட்டு, தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது.
இந்த ஐந்து ஆண்டு கால நாடாளுமன்றத் தொடரில் எடுக்கப்படும் மிக முக்கியமான தீர்மானமாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பை நோக்கி ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MSPs) நகர்ந்து வரும் நிலையில், இந்த விவாதம் பெரும் அரசியல் மற்றும் தார்மீக சவாலாக மாறியுள்ளது.
கடந்த மே மாதம் இந்தச் சட்டமூலம் முதற்கட்டமாக வாக்கெடுப்பிற்கு வந்தபோது, 70 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இருப்பினும், அப்போது ஆதரவளித்த பல உறுப்பினர்கள், தமது சில சந்தேகங்களுக்குத் தெளிவான தீர்வு கிடைத்தால் மட்டுமே இறுதி வாக்கெடுப்பில் ஆதரவளிக்கப்போவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது அந்த உறுப்பினர்களின் முடிவே இந்தச் சட்டத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ளது.












