பெண்கள் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களைத் தடுக்க, வடக்கு வேல்ஸ் (North Wales) காவல்துறையினர் பெண் ஓட்டப்பந்தய வீரர்களுடன் இணைந்து புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளியில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்வதற்காக ‘ஆபரேஷன் கேடன்ஸ்’ என்ற புதிய திட்டத்தை வடக்கு வேல்ஸ் காவல்துறை தொடங்கியுள்ளது.
தீவிர ஓட்டப்பந்தய வீராங்கனையான காவல்துறை அதிகாரி கேட்ரின் ஹியூஸ் (PC Catrin Hughes) என்பவரால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பெண் காவலர்கள் சாதாரண உடையில் (Plain clothes) பெண்கள் அதிகம் ஓடும் பாதைகளில் அவர்களுடனேயே ஓடிப் பாதுகாப்பை உறுதி செய்வர்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின்படி, பிரித்தானியாவில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும் பெண்களில் 68 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
இதில் தகாத வார்த்தைகளால் பேசுதல், பின்தொடருதல் (19%), பாலியல் சீண்டல்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் கூச்சலிடுதல் போன்றவை அடங்கும்.
இதேவேளை, கடந்த மார்ச் 7-ஆம் திகதி ரில் (Rhyl) கடற்கரை ஓரத்தில் பெண் காவலர்கள் சாதாரண உடையில் ஓடிப் பரிசோதனை நடத்தினர்.
இதன்போது பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்றாலும், பெண் காவலர்கள் ஓடும்போது அவர்களைக் கடந்து சென்ற வாகனங்கள் வேண்டுமென்றே ஒலியெழுப்பி (revving engines) இடையூறு செய்தமை கண்டறியப்பட்டது.
இத்தகைய செயல்கள் அச்சுறுத்தலாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் (Misogyny) கருதப்படுவதால், இனிவரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
துன்புறுத்தல்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாகப் பொலிஸாருக்குப் புகாரளிக்குமாறு பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வேல்ஸ் மாகாணத்தில் இத்தகைய வினோதமான மற்றும் பயனுள்ள பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ள முதல் காவல்துறைப் பிரிவு இதுவாகும்.













