ஈரான் போர் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், வொஷிங்டனும் தெஹ்ரானும் பகைமையைத் தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து ஆசியாவின் முக்கியப் பங்குச் சந்தைகள் திங்களன்று (23) சரிந்தன.
காலை நேர வர்த்தகத்தில் ஜப்பானின் முக்கிய குறியீடான நிக்கெய் 225, 3.4% சரிந்தது.
அதே நேரத்தில், தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) சுமார் 5% வீழ்ச்சியடைந்தது.
ஜப்பானும் தென் கொரியாவும் இந்த மோதலால் குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏனெனில் அவை பொதுவாக அந்த நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் சார்ந்துள்ளன.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பிற சந்தைகளும் திங்கட்கிழமை அன்று சரிவைச் சந்தித்தன.
ஹொங்கோங்கின் ஹேங் குறியீடு 2.5% சரிந்தது மற்றும் தைவான் வெயிட்டட் இன்டெக்ஸ் 2% இழந்தது.
உலகளாவிய எண்ணெய் விலைகள் பெரும்பாலும் நிலையாக இருந்தன; பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 0.2% குறைந்து $112 (£84) ஆகவும், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெய் 0.3% அதிகரித்து $98.57 ஆகவும் இருந்தது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதிலிருந்து, உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறம்படத் தடுத்துள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20% பொதுவாக இந்த நீர்வழிப்பாதை வழியாகவே செல்கிறது.
மேலும் இந்தப் போர் உலகளாவிய எரிபொருள் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
இந்தப் போரினால் பல தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை உலகம் எதிர்கொள்ள நேரிடலாம் என்று சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் ஃபாத்திஹ் பிரோல் ( Fatih Birol) திங்கட்கிழமை அன்று கூறினார்.
அவுஸ்திரேலியாவின் தலைநகரில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய அவர், தற்போதைய எரிசக்தி நெருக்கடியை 1970-களின் நெருக்கடிகளுடனும், 2022 இல் ரஷ்யா உக்ரேன் மீது நடத்திய படையெடுப்பின் தாக்கத்துடனும் ஒப்பிட்டுப் பேசினார்.
முக்கிய ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துப் பாதையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை 23:44 GMT மணிக்கு எச்சரித்தார்.
ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலிய நகரமான டிமோனாவைத் தாக்கியதைத் தொடர்ந்தும், அருகிலுள்ள அராத் நகரின் மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சற்று முன்னரும் அந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அதேநேரம், தனது நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள எரிசக்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு மீளமுடியாதபடி அழிக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கை, ஏற்கனவே உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து, விலைகளை உயர்த்தி, எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள மோதலை கணிசமாக தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.















