அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை 10.04.2026 நடைபெறவுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இரு நாடுகளின் தலைமைக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்துப் பிணக்குகளையும் தீர்ப்பதற்கான ஒரு திட்டவட்டமான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஏதுவாக, 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் இஸ்லாமாபாத்துக்கு வருமாறு அழைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இரு தரப்பு மோதலை நிறுத்தி அமைதி நிலையைக் கொண்டுவர பாகிஸ்தான் எடுக்கின்ற முயற்சிகளை அவர் பாராட்டியதாகவும் ஷெபாஸ் ஷெரீப் மேலும் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் 45 நிமிடங்கள் உரையாடியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
















