இலங்கையில் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியவும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது.
வீதிகளில் அபாயகரமான முறையிலும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துபவர்களைக் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, பொலிஸ் தலைமையகம் விசேட WhatsApp இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறான விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை 070-4755600 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
இந்தச் சேவையானது போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும்.
மேலும், இது 24 மணிநேரமும் செயற்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ காட்சிகளைப் பதிவேற்றும் போது, விசாரணைகளை இலகுவாக்கும் வகையில் பின்வரும் விபரங்களைக் கட்டாயம் குறிப்பிடுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்:
அதன்படி, சம்பவம் இடம்பெற்ற திகதி, சம்பவம் நடைபெற்ற இடம், குறித்த பகுதிக்குரிய பொலிஸ் பிரிவு என்பன கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும் .
பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பு மூலம் வீதி விபத்துகளைக் குறைக்கவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடியும் என பொலிஸ் தலைமையகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.












