மாலைத்தீவு ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு (Mohamed Muizzu) அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளின் கடற்றொழில் துறைகளிலும் ஏற்படுத்தக்கூடிய புதிய முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மாலைத்தீவின் மீன் வளங்களையும், இலங்கையின் வளர்ச்சியடைந்த தகரத்திலடைக்கப்பட்ட மீன் (Canned Fish) கைத்தொழில் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து புதிய உற்பத்திகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சர் யோசனை முன்வைத்தார்.
தற்போது “Made in Sri Lanka” முத்திரையுடன் கூடிய இலங்கையின் கடல்சார் உற்பத்திகள் துபாய் ஊடாகவே மாலைத்தீவுச் சந்தையைச் சென்றடைகின்றன.
இந்த நிலையை மாற்றி, இடைத்தரகர்கள் இன்றி இலங்கையிலிருந்து நேரடியாக மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான புதிய பொறிமுறையொன்றை வகுக்க இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.
மாலைத்தீவுச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் மீன் பதப்படுத்துதல் (Processing) மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளைத் தயாரிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்த வர்த்தக மற்றும் இராஜதந்திர நகர்வு, எதிர்வரும் மாலைத்தீவு ஜனாதிபதியின் விஜயத்தின் போது உத்தியோகபூர்வ ஒப்பந்தங்களாக மலரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












