லண்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, ‘மசிவ் அட்டாக்’ (Massive Attack) இசைக் குழுவின் பிரபலம் ராபர்ட் டெல் நாஜா (Robert Del Naja) உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) கடந்த சனிக்கிழமை ‘Palestine Action’ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துப் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் 18 வயது முதல் 87 வயது வரையிலான நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பிரிஸ்டலைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் ராபர்ட் டெல் நாஜா (Robert Del Naja), “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன், பலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகத்தை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்த போராட்டக்காரர்களுடன் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளியிட்ட அவரை, பொலிஸார் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இதேவேளை, தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 523 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர பொலிஸார் (Metropolitan Police) உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதியவர்கள் மற்றும் பெண்கள் எனப் பாரபட்சமின்றிப் பொலிஸார் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, பெண்ணொருவரை பொலிஸார் இழுத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சுமத்தியதுடன், பொலிஸாருக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர்.
இதேவேளை, ‘Palestine Action’ அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது.
இந்தத் தடையை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைப் பொலிஸார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுவரை இந்த அமைப்புடன் தொடர்புடைய சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















