சட்டத்தரணிகள் சங்கம் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் முனைப்பாக இருக்கிறது என்று தெரிகிறது. அதுதொடர்பான இரண்டாவது சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.மூத்த சட்டத்தரணிகள் இந்த விடயத்தில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த சந்திப்பின்போது மணிவண்ணன் அணியைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். சட்டத்தரணிகளின் அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நெருக்கமானது என்று ஓர் அபிப்பிராயம் இருந்தது. எனினும்,அண்மையில் நடந்த சந்திப்பில் மணிவண்ணன் அணி அழைக்கப்பட்டமையானது சட்டத்தரணிகள் சங்கத்தின் நடுநிலைத் தன்மையை உறுதிப்படுத்தக் கூடியது.
நல்ல விஷயம்.தொடர்ந்து செய்யட்டும். ஒரு புதிய யாப்பை நோக்கி தமிழ் தரப்பு முன்மொழிவை ஒரே ஆவணமாக முன் வைப்பது என்ற அடிப்படையில் சட்டத்தரணிகள் சிந்திப்பது நல்லது. ஒரு புதிய யாப்பை நோக்கி பொதுவான தமிழ் முன்னொளிவை வைப்பதற்கான இந்த ஒருங்கிணைப்பை சட்டத்தரணிகளே முன்னெடுப்பது தொழிற்சார் திறன்களின் அடிப்படையிலும் பொருத்தமானது.ஏனென்றால் யாப்பு உருவாக்கம் என்பது இறுதியிலும் இறுதியாக சட்டப் பரிமாணத்தைக் கொண்டு ஒன்றுதான்.
அதேசமயம் இங்கு இரண்டு பிரதானமான விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும். முதலாவது, ஒரு புதிய யாப்பைக் கொண்டு வரும் நிகழ்ச்சி நிரல் ஏதும் அரசாங்கத்திடம் உண்டா என்பது. இரண்டாவது யாப்புருவாக்கம் எனப்படுவது ஒரு சமாதான முன்னெடுப்பின் கடைசிக் கட்டம்தான்.தொடக்கம் எதுவென்றால், சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டங்களுக்கு இடையிலான ஒரு புதிய சமூக உடன்படிக்கை ஆகும். சட்டத்தரணிகள் சங்கம் அதுதொடர்பாக எனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டு வருமா இல்லையா என்பது. இந்த அரசாங்கம் எதிர்பாராமல் இரண்டு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிவந்தது. ஒன்று புயல்.மற்றது மேற்காசியப் போர்.இரண்டிலிருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டு. மேலும், அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிபெற வேண்டும்,ஆட்சி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் சிந்திக்குமாய் இருந்தால் இதுதான் அதனுடைய முதலாவது ஆட்சிக்காலம் என்ற அடிப்படையில், இந்த முதலாவது ஆட்சி காலத்தில் ஒரு யாப்புருவாக்க முயற்சியில் ஈடுபட அரசாங்கம் தயாராக இருக்குமா ?
ஒரு புதிய யாப்பு ஏன் தேவை? முதலாவது முதன்மைக் காரணம், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு.இரண்டாவது காரணம், இப்போது இருக்கும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவது.
ஜேவிபியும் உட்பட தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான மக்கள் அமைப்புகள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று கடந்த பல தசாப்தங்களாக கேட்டு வந்தவை. ஆனால் தேசிய மக்கள் சக்தியின் இதுவரையிலுமான ஆட்சிக் காலத்தை வைத்துச் சிந்தித்தால்,அவர்கள் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார்கள் என்று நம்பத்தக்கதாக இல்லை.
தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல, இதற்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் தங்களை லிபறல்களாகக் காட்டிக்கொண்ட சந்திரிகாவைப் போன்ற பலரும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப் போவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் பதவிக்கு வந்ததும் அவர்கள் சிம்மாசனத்திலேயே ஒட்டிக்கொண்டு இருந்து விட்டார்கள்.அந்தச் சிம்மாசனத்தை அகற்ற வேண்டும் என்ற அவர்களுடைய வாக்குறுதியை மறந்து விட்டார்கள்.மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த ஜேவிபி இந்த மாற்றத்தைச் செய்யுமா?
அவ்வாறு யாப்பை மாற்றும்போது அங்கே இனப்பிரச்சினைக்கான தீர்வையும் இணைக்க வேண்டும். அதாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண வேண்டும். தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் அதைச் செய்து ,பின்வரக்கூடிய ஏனைய ஆட்சிக் காலங்களை இழப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா?
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று சொன்னால் ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோல சம்பந்தப்பட்ட இனங்களுக்கு இடையே ஒரு சமூக உடன்படிக்கை அதாவது சமாதான உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவிலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.அயர்லாந்தில் எழுதப்பட்ட பெரிய வெள்ளி உடன்படிக்கை அங்கே முன்னுதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.
இப்பொழுது கேள்வி என்னவென்றால் அப்படி ஒரு சமூக ஒப்பந்தத்தை எழுதத் தேவையான அரசியல் சூழல் உண்டா ?என்பதுதான்.
ஒரு சமாதான உடன்படிக்கை எப்பொழுது உருவாக்கப்படும்?பிணக்குக்கு உள்ளாகிய அல்லது மோதலில் ஈடுபடுகின்ற தரப்புகளுக்கு இடையே அரசியல் வலுச் சமநிலை மாறும் போது அந்த புதிய வலுச் சமநிலையைப் பிரதிபலிக்கும் உடன்படிக்கையாக சமாதான உடன்படிக்கைகள் அமைவதுண்டு. அவ்வாறாயின் இப்போதுள்ள இனங்களுக்கு இடையிலான வலுச் சமநிலை தமிழ் மக்களுக்குச் சாதகமானதா ?
இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உள்ளதில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த அதே அளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்திருக்கின்றன. தமிழ்த் தரப்பு நாடாளுமன்றத்தில் ஒரு பலமான தரப்பாக இல்லை. கட்சி நிலவரங்களை எடுத்துப் பார்த்தாலும் தமிழ்த் தரப்பு தன்னளவிலும் பலமான ஒரு திரட்சியாக இல்லை. இந்நிலையில் எந்தப் பலத்தின் அடிப்படையில்,எந்த வலுச் சமநிலையின் மீது, ஒரு சமாதான உடன்படிக்கையை எழுதுவது?
2009இல் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபோது உருவாகிய வலுச் ச்சமநிலையானது தமிழ் மக்களுக்குப் பாதகமானது,எதிரானது. அங்கே தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட தரப்பாக இருந்தார்கள்.ராஜபக்சக்கள் யுத்த வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கினார்கள்.
அடுத்த கட்டமாக 2015 இல் ஏற்பட்ட “ரெஜிம் சேஞ்ச்”. இதில் தமிழ்த் தரப்பு அந்த ஆட்சி மாற்றத்தின் பங்காளியாக இருந்தது.போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்ட தரப்பு என்ற நிலையில் இருந்து ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தத் தேவையான ஒரு தவிர்க்கப்படவியலாத தரப்பு என்ற பேர வாய்ப்பு அப்பொழுது தமிழ் மக்களுக்குக் கிடைத்தது. தோல்வியை ஏற்றுக்கொள்ளாத தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பும் அதற்கு முக்கிய காரணம். அதேயளவு முக்கிய காரணம்,ராஜபக்சக்களின் சீனச் சாய்வு.எனவே பிராந்தியத்தில் சீனப் படர்ச்சியைத் தடுப்பதற்கு இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. அதற்குத் தமிழ் மக்களை அரவணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.அதனால் தமிழ் மக்களின் பேரம் உயர்ந்தது.அதன் விளைவாக ஏற்பட்ட புதிய வலுச் சமநிலையின் விளைவுதான் நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானம் ஆகும்.
ஆனால் 2018ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அந்த வலுச் சமநிலையைக் குழப்பினார். அதன்பின் நடந்த தேர்தல்களில் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள்.எனினும் ராஜபக்சங்களுக்கு பெரிய வெற்றியை அள்ளிக் கொடுத்த அதே சிங்கள மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்களின்போது ராஜபக்சக்களை மீண்டும் தோற்கடித்தார்கள்.ஆட்சியிலிருந்து துரத்தினார்கள்.தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக நாட்டின் வலுச் சமனிலை மாறியது. இப்புதிய வலுச் சமநிலையின் விளைவாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்கிறது.இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், இந்தப் புதிய வலுச் சமில்லை மாற்றத்தில் தமிழ் மக்கள் பங்காளிகள் இல்லை என்பதுதான்.
இப்புதிய வலுச் சமநிலையின் மீது ஒரு புதிய உடன்படிக்கையை எழுதப் போனால் அங்கே தமிழ் மக்களின் பேரம் எப்படி இருக்கும்? தமிழ்த் தரப்பில் உள்ள பெரிய கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் தமிழ்ப் பகுதிகளில் ஒரே அளவு ஆசனம் கிடைத்திருக்கிறது. அதனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் மட்டும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை,தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அரசாங்கம் கூறும். இந்த வாதத்தின் அடிப்படையில் சிந்தித்தால்,தமிழ் மக்களின் பேரம் அதிகரித்து இருக்கிறதா ?குறைந்து இருக்கிறதா? இப்புதிய வலுச் சமநிலையின் மீது ஒரு சமூக உடன்படிக்கையை எழுதப் போனால் என்ன நடக்கும்? தமிழ்த் தரப்பிடம் இதுதொடர்பான ஆழமான உரையாடல்கள் உண்டா?












