பிரித்தானிய மன்னர் மற்றும் ராணியின் எதிர்வரும் அமெரிக்கப் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பொன்றைப் பெக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படவுள்ள உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தின் போது, பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்துடன் தொடர்புடைய எவரையும் மன்னரும் ராணியும் சந்திக்க மாட்டார்கள் என்று அரண்மனை வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் அமெரிக்காவின் சில முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டு வரும் சூழலில், இராஜதந்திர ரீதியான சிக்கல்களைத் தவிர்க்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெறவுள்ள இந்தப் பயணத்தின் போது, ராணி கமீலா பெண்கள் நலன் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளார்.
குறிப்பாக, குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் போராடும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை அவர் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.
ஈரான் போர் விவகாரத்தில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மைக்காலமாகச் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
இத்தகையதொரு இக்கட்டான சூழலில் மன்னரின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீர்செய்யும் ஒரு சவாலான களமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பல ஜனாதிபதிகள் மற்றும் மன்னர்களின் ஆட்சிக் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும் பிரித்தானியா – அமெரிக்கக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் மன்னர் தனது தனித்துவமான இராஜதந்திரப் பங்கினை ஆற்றுவார் என அரண்மனை வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்காவின் உயர்மட்டப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் நிலவி வரும் பின்னணியில், பிரித்தானிய அரச குடும்பத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.














