முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் இருந்து பெருமளவிலான தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி பெறப்பட்ட சோதனை ஆணையின் அடிப்படையில், இன்று (16) அவரது இல்லத்தில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின் போது 221 T56 ரகத் தோட்டாக்கள், 2 T56 ரக மெகசின்கள் (Magazines),
31 7.2 ரகத் தோட்டாக்கள் மற்றும் 103 0.2 ரகத் தோட்டாக்கள், செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக சோதனைகளின் போது அந்த வீட்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.
அவற்றில் ஒன்று சந்தன கத்ரியாராச்சியின் பெயரிலும், ஏனைய மூன்று துப்பாக்கிகள் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 2 சொட்கன் (Shotgun) ரக துப்பாக்கிகளும், 2 9mm ரகத் துப்பாக்கிகளும் அடங்குகின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வசம் இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டு இருப்பதற்கான பின்னணி என்ன என்பது குறித்துக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் நேரடி மேற்பார்வையின் கீழ், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













