இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாடு, இந்திய வீடமைப்பு திட்டம், மேலும் நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால அபிவிருத்தி மற்றும் உதவி திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இதனுடன், இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன.
இந்த சந்திப்பின் போது இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா பல முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது.
1. மலையக மக்களுக்கு OCI விசாவை வழங்க வேண்டும் என இ.தொ.கா இந்திய அரசாங்கத்திடம் பலதடவை கோரிக்கையை முன்வத்துள்ளது.
இம்முறை இதற்கு சாதகமாக பதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கை கடல் வளம் பாதிப்படைகிறது.
எனவே இந்திய மீனவர்கள் எல்லை மீருவதை கட்டுப்படுத்தி, இலங்கை மீனவர்களுக்கு தேவையான வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுதல்.
03. இந்தியாவில் அகதி முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கையர்களுக்கு இந்திய நாட்டின் குடியுரிமை மற்றும் இலங்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என விரும்புபவர்களுக்கு அவர்கள் இலங்கையில் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுதல்.
04. 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மேலதிக வீடுகள் பெற்றுக்கொடுத்தல்.
5. இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார காப்புறுதி திட்டங்களை மலையக மக்களுக்கு ஏற்பாடு செய்தல்.
6. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவரும் புலமைப்பரிசில் திட்டங்களின் கொடுப்பனவுகளை தற்போதைய வாழ்வாதார நிலைக்கு ஏற்ப அதிகரித்தல்.
7. இந்தியாவில உள்ள IT நிறுவனங்களை இலங்கையின் மலையக பகுதிகளில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தல். இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்.
8. தோட்டப்புறங்களில் செல்வதற்கு சிறியரக அம்புலன்ஸ் வண்டிகளை சுகாதார துறையைமேம்படுத்த வழங்குதல்.
9. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த இந்திய அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும்
10. உணவு தயாரிக்கும் வலயங்களை உருவாக்குதல்
11. இலங்கையில் மருந்து உற்பதியை மேற்கொள்ள இந்திய நிறுவனங்களை ஊக்குவித்தல்.
12. வடமாகாணத்தை போன்று மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ரயில் பாதைகளை மேம்படுத்தி கொடுத்தல்.
13. ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்குதல்.
போன்ற முக்கிய கோரிக்கைகளை இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் மற்றும் இ.தொ.காவின் உயர்மட்ட குழு பிரதிநிதிகள் கலந்துக் கொள்ள உள்ளனர்.














