அமெரிக்காவுக்கான தூதராக லோர்ட் மாண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்டதில் நிலவும் பாதுகாப்பு சோதனை குளறுபடிகள் குறித்து, பிரதமர் Sir Keir Starmer இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.
மாண்டல்சனின் நியமனத்தின் போது ‘முறையான நடைமுறைகள்’ பின்பற்றப்பட்டதாக பிரதமர் ஏற்கனவே கூறிவந்த நிலையில், ஆரம்பகட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகள் தமக்கு மறைக்கப்பட்டதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த வாரம் தான் தமக்குத் தெரியவந்ததாக பிரதமர் கூறினாலும், ஓராண்டு காலமாக இந்தத் தகவல்கள் அவருக்குத் தெரியாமல் இருந்தது நம்பத்தகுந்ததாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனொக் (Kemi Badenoch) குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியுள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஏற்கனவே இந்த சர்ச்சை காரணமாக பிரதமரின் தலைமை அதிகாரி மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள ரகசிய ஆவணங்கள் பிரதமருக்கு மேலும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு மற்றும் நிதி விவகாரங்கள் குறித்த எச்சரிக்கைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டன என்பது குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், லோர்ட் மாண்டல்சன் மீது குற்றவியல் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதால், லேபர் கட்சி அரசாங்கம் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது


















