பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் (Birmingham) நகரில் கடந்த 14 மாதங்களாக நீடித்து வந்த குப்பை சேகரிப்பவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேர்மிங்ஹாம் மாநகர சபையின் குப்பை சேகரிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நிலவி வந்த 14 மாத காலத் தொழிற்தகராறு தற்போது ஒரு தீர்வை எட்டியுள்ளதாக மாநகர சபைத் தலைவர் ஜோன் காட்டன் (John Cotton) தெரிவித்துள்ளார்.
குப்பை சேகரிப்பு அதிகாரிகளின் (WRCO) பதவிகளை நீக்க மாநகர சபை எடுத்த முடிவை எதிர்த்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ‘யுனைட்’ (Unite) தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இது முழுநேர வேலைநிறுத்தமாக மாறியது.
இதனால் நகரின் வீதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்ததோடு, மீள்சுழற்சி சேவைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பல மாத காலத் தாமதத்திற்குப் பிறகு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான புதிய சலுகைத் திட்டத்தை வழங்க முன்வந்துள்ளதாக மாநகர சபை தெரிவித்துள்ளது.
புதிய உடன்பாட்டின்படி, தொழிலாளர்களுக்கு சுமார் £16,000 (பவுண்டுகள்) இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய திட்டங்களில் சாரதிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாததே உடன்பாடு எட்டப்படாமைக்கு முக்கிய காரணமாக இருந்தது.
எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்தே ஆளும் தொழிற்கட்சி (Labour) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தத் திட்டத்தின் முழு விபரங்களும் தற்போது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
மாநகர சபையிடமிருந்து விரிவான ஆவணங்கள் கிடைத்ததும், தொழிலாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வேலைநிறுத்தம் முறைப்படி முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
இந்த உடன்பாடு எட்டப்பட்டால், ஓராண்டிற்கும் மேலாகத் துர்நாற்றம் மற்றும் குப்பை மேடுகளால் அவதிப்பட்ட பேர்மிங்ஹாம் நகர மக்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.













