பிரித்தானிய இராணுவத்தின் சர்ச்சைக்குரிய ‘அஜாக்ஸ்’ (Ajax) கவச வாகனங்களின் சோதனைகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக இராணுவ வீரர்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்களின் சோதனைகளை “எச்சரிக்கையுடன்” மீண்டும் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பயிற்சியின் போது, சுமார் 30 இராணுவ வீரர்கள் இந்த வாகனங்களில் ஏற்பட்ட அதிகப்படியான சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக உடல்நலக் குறைபாட்டிற்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து, அஜாக்ஸ் வாகனங்களின் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொழில்நுட்பக் கோளாறுகள், பயிற்சியில் நிலவிய மாறுபாடுகள், கடும் குளிர் மற்றும் காற்றின் தரம் போன்ற பல காரணிகளின் கூட்டு விளைவாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் தற்போது குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இந்த வாகனங்களை உற்பத்தி செய்யும் ‘ஜெனரல் டைனமிக்ஸ்’ (General Dynamics) நிறுவனம், அரசின் இந்த முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.














